நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

இதனையொட்டி வானமாமலை பெருமாள், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வந்தன.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கருடன் சேஷம், அனுமன், சிம்மம், கிளி, யானை, குதிரை அன்னம், தங்க சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவரமங்கை தயாருடன் எழுந்தருளிய வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

இதனையொட்டி காலையில் பெருமாள் தாயாருடன் தேரில் எழுந்தருளினார். நாங்குநேரி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பெருமாள் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *