நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத்துறையும், சென்னை குறள் மலைச் சங்கமும் கல்விசார் நிகழ்வுகள் நடத்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்தது.
விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், குறள் மலைச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பா.ரவிக்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் தமிழநாடு ஆளுநரால் வெளியிடப்பட்ட திருக்குறள் உலகுக்கான நூல் என்ற புத்தகத்தை குறள் மலைச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பா.ரவிக்குமாரி டமிருந்து விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், பெற்றுக் கொண்டார்.
குறள் மலைச் சங்கம் என்ற அமைப்பு 1999 இல் தொடங்கி, தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது.
இச்சங்கம் அரசு பதிவு பெற்ற அமைப்பாகும். இவ்வமைப்பு தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளிலும் திருக்குறளைப் பரப்பும் விதமாகச் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களாக, உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை மலையில் கல்வெட்டாகப் பதித்து திருக்குறள் மாமலை உருவாக்குவது, உலகத்துக்கு முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும், திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளிலும் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்பது போன்ற உயர்ந்த இலக்குகளோடு இவ்வமைப்பு பயணித்து வருகிறது.
இந்நிகழ்வில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் இணைச் செயலர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரிஸ்வரன், தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.பேபிஷகிலா அறிமுகவுரை ஆற்றினார்.
குறள் மலைச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பா.ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ் உயராய்வுத்துறையின் தலைவர் முனைவர் ம.கவிதா வரவேற்புரை ஆற்றினார்.
நிறைவாக தமிழ் உயராய்வுத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார். மேலும் தமிழ் உயராய்வுத்துறையின் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.