திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சிப்பகுதியில் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் மணலூர்பேட்டைக்கு அருகில் உள்ள சித்தப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை சிங்கார உதியன், தலைமையில் ஆய்வாளர்கள் விழுப்புரம் சி.வீரராகவன், நல்நூலகர் மு.அன்பழகன், ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
” காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு”
சித்தப்பட்டினம் சிவன் கோயிலுக்கு முன்பாக மண்ணில் புதைந்திருந்த ஒரு பலகைக் கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.
அக்கல்வெட்டு முன்பக்கத்தில் 22 வரிகளும், பின்பக்கத்தில் 27 வரிகளில் சில வரிகள் சிதைந்தும் இருந்தது.
சகாப்தம் 1456 நட்சத்திர குறிப்புகளோடு, விஜய ஆண்டு, மீன மாதம், அதாவது பங்குனி மாதம் ஐந்தாம் நாள், வியாழக்கிழமை மிருகசீரிசம் நட்சத்திரத்தோடு குறிப்பிடப்படுகிறது.
இதன்மூலம் , மீனம் என்பது நட்சத்திரத்தில் கடைசி, அதே போல மாதங்களில் கடைசி பங்குனி, பங்குனி மாதத்திற்கு இணையானது மீனம் என்ற குறிப்புக் காணப்படுகிறது
இக் கல்வெட்டு பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு அச்சுததேவ மகாராயர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டதாகும்.
இந்த பலகைக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களானது விஜயநகர காலத்துக்கு உரியது,
விஜயநகர அரசுக்கே உரித்தான “மன்மகா மண்டலேஸ்வரன் கண்” என்று ஆரம்பிக்கும் மெய்க்கீர்த்தியைக் கொண்டு இக்கல்வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறுக்கைப் கூற்றத்துக்கு வடகரைப் பெண்ணை தேவமண்டலமான வானகப் பாடி நாட்டுக்கு உட்பட்ட சித்தப் பட்டினத்து உறையும் உடையார் எடுத்தாயிரம் கொண்டான் கோயிலுக்கு சொந்தமான பழுதடைந்த கட்டடத்தைப் பராமரிக்க, நிலம் கொடையாக அளிக்கப்பட்டதை இக் கல்வெட்டுக் கூறுகிறது.
“செப்பு நாணயம் கண்டெடுப்பு”
மேலும் இந்த சித்தப்பட்டினத்தில் கண்டறியப்பட்ட விஜய நகர காலத்து கல்வெட்டிற்கு அருகில் ஒரு செப்பு நாணயமும் கண்டெடுக்கப்பட்டது.
இது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாமினி சுல்தானுடைய ஆட்சிக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயமாகும்.
இச்செப்பு நாணயம் ஐந்து முனைகளைக் கொண்டது.
இதன் எடை, 10கிராம் 660 மில்லிகிராம் ஆகும்.
இதன் முன்பக்கம் முகடுகளைக் கொண்ட நதியின் உருவமும்,
அதன் மறுபக்கம் பாரசீக மொழியில் பாமினி சுல்தான் மன்னரான ‘அசன்சா’ என்ற பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இவரது ஆட்சிகாலத்தில் இது போன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது என்பதற்கு இதுவே சான்றாகும்.
ஏற்கனவே இப்பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தினர், 16ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்துக் கல்வெட்டினைக் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கவி சண்முகம், க.ரவிச்சந்திரன், நூலகர்கள் மு.சாந்தி, ச.தேவி,மு.கோவிந்தன், பெ. விக்னேஷ், கி.பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.