வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல், 1மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி கிராமத்தின் வழியாக தஞ்சையில் இருந்து திருவாரூருக்கு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக வெண்ணாற்றிலிருந்து குருவாடி கிராமத்தில் பாசன வடிகால் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. மேலும் தென்குவளைவேலி, குருவாடி, சாத்தனூர், எருமைபடுகை, தேவமங்கலம் உள்ளிட்ட 6
கிராமங்களில் பாசனம் தடை பட்டுள்ளது, சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
எனவே தேசிய நெடுஞ்சாலை பணி காரணமாக வெண்ணாற்றிலிருந்து குருவாடி கிராமத்தில் உள்ள பாசனம் மற்றும் பணிகள் வாய்க்காலுக்கு தண்ணீர் வராமல் தடைப்பட்டுள்ள நீர் வழித்தடத்தை சீரமைத்து அதில் பாலம் தட்டித்தரக்கோரியும், குருவாடி கிராமத்தில் சாலை வசதியும் கோரி 6கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நார்த்தாங்குடி யில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்மன்னார்குடி-கும்பகோணம் மெயின் ரோட்டில் 1
மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில்
ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரப்படும் என்று கூறியதையடுத்து
சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக 1மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வலங்கைமானில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களை முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே ஒரு முறை வலங்கைமான் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு
உள்ளதாக கூறப்படுகிறது.