நாமக்கல்
நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக தற்போது பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பூபதி பணியாற்றி வந்த போது நிலப்பிரச்சினை தொடர்பாக வந்த புகாரில் பணம் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டதாகவும்,பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தற்போது புகார் ஒன்று வந்துள்ளது.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆய்வாளர் பூபதிக்கு சொந்தமான இடங்களில் நாமக்கல் மற்றும் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள திருநகரில் நகரில் பூபதி குடியிருக்கும் வீடு, மல்லசமுத்திரத்தில் உள்ள அவரது பூர்வீக வீடு , அவரது மாமனார் வீடு, மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நாமக்கல் டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் போலீசார் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.