முக்கூடலில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா
பெண்களுக்கு கொடுக்கும் கல்வி அவருக்கு மட்டுமானது அல்ல, இந்த சமுதாயத்திற்கானது. பனைமரமும், தாமிரபரணி ஆறும் தான் என் துணிச்சலும் காரணம் என கல்லூரி விழாவில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு
நெல்லை மாவட்டம் முக்கூடலில் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக தொலுக்கான ஆளுநரும், புதுச்சேரி கூடுதல் நிலை ஆளுநருமான கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த படங்களை பார்வையிட்டு, குழுப்டம் எடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், குமரி என் தந்தை ஊர் ! நெல்லை என் தாய் ஊர் ! இதனால் தென் பகுதிக்கு எப்போது வந்தாலும் தாய் வீட்டுக்கு வந்தது போல் மகிழ்ச்சி அடைகிறேன். வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத தாமிரபரணி ஆற்றையும், பனை மரங்களையும் பார்த்து வளர்ந்தவள் நான். பனை மரமும், தாமிரபரணி ஆறும் தான் என் துணிச்சலுக்கு காரணம். இந்த மண்ணில் கிடைத்த ஆரம்ப கல்வியும், தாமிரபரணி ஆறும் தான் இரு மாநிலங்கள் ஆளும் துணிச்சலை தந்தது.
நான் தான் இந்தியாவின் இளம் வயது ஆளுநர், இந்தியாவின் பிறந்த புதிய குழந்தை மாநிலம் தெலுங்கானா, அப்போது பத்திரிகையில் எழுதினார்கள், ஆளுமைக்கான எந்த பின்புலமும் இல்லாமல் நான் எப்படி புதிய மாநிலத்தை நிர்வகிக்க போகிறேன் என்று, ஆனால் நான் மகப்பேறு மருத்துவம் படித்து இருக்கிறேன். அதனால் புதிதாகப் பிறந்த குழந்தையை கையாள தெரியும் ! குழந்தையைப் போல் புதிதாக பிறந்த மாநிலமான தெலுங்கானாவை பார்த்துக் கொண்டேன். 10 மாதம் கழித்து மீண்டும் புதுச்சேரியை ஆளும் பொறுப்பு வந்தது ! அப்போதும் கேள்வி எழுப்பினார்கள் ? அப்போதும் கூறினேன், நான் மகப்பேறு கல்வி படித்தவள். இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் இரண்டு குழந்தைகளையும் கையாள தெரியும். இதனால்தான் புதுச்சேரியையும் என்னால் ஆள முடிந்தது இதற்கு துணிச்சல் தந்தது என் கல்விதான்.
பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் குறிப்பாக தென்பகுதியில் பெண்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
உலகின் மிகச்சிறந்த அரசியல் தலைவர் மோடி ! எந்த நாடு வர வேண்டாம் என்று சொன்னதோ அந்த நாடு அமெரிக்கா இப்போது வாருங்கள் வாருங்கள் என வரவேற்றது. இதுதான் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தனக்கானதாக மாற்றுவது.
பெண்களுக்கு கொடுக்கும் கல்வி அவரது அவருக்கு மட்டுமானது அல்ல இந்த சமுதாயத்திற்கானது. பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு தந்தவர் காமராஜர். இப்போது மத்திய அரசின் புதிய கல்விக்கு அடித்தளமாக அமைந்தது காமராஜரின் மதிய உணவு திட்டம் தான்.
பெண்களுக்கு அதிகம் கல்வியில் வாய்ப்பு கொடுங்கள் பாரதி சொன்னது போல ஞானசெருக்கு வேண்டும். அது கல்வியினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே பெண்களுக்கு கல்வி கொடுத்தால் அதன் மூலம் கிடைக்கும் பெருமையே செருக்கு தரும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நெல்லை எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்…