வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் பல மாதங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
வேதாரணியம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. திட்டத்திற்கென கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சாலைகளில் மைய பரப்பில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது.
குடிநீர் பைப்பானது பாபநாசம்- குடவாசல் சாலைவழியாக வலங்கைமானுக்கு வந்து பின்னர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் செல்கின்றது.
சாலையில் மைய பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களால் அவ்வப்போது கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு பெரிய அளவில் தண்ணீர் வெளியேறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்துள்ள விருப்பாச்சிபுரம் கடைவீதி அருகே கூட்டுக் குடிநீர் கிட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படும் வகையில் உள்ளது. எனவே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பினை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் சாலைப்போக்குவரத்தை நிறுத்திவிட்டு, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.