பாபநாசம்
செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ராஜகிரி அம்பேத்கர் தெருவில் சேரும் சகதியுமாக குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலை..
மழை காலங்களில் கிராமங்களில் டெங்கு நோய் பரவும் அபாயமும், சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி அம்பேத்கர் தெருவில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெருவில் அமைந்துள்ள சாலையின் தார் முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் மழையினால் சாலை சேரும் சகதியுமாக காணப்படுவதோடு, பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
மேலும் அம்பேத்கார் நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடை மூடப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி டெங்கு மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் ராஜகிரி அம்பேத்கார் நகர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு உடனடியாக புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.