வலங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சாய்ந்தது இரண்டு நாள் ஆகியும் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிகவும் காலதாமதமாக வே துவங்கியது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் இருந்து பருவமழை பெய்வது வழக்கம்.
ஆனாலும் வலங்கைமான் பகுதியில் நவம்பர் மாதத்திலேயே பருவமழை பெய்யத் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நவம்பர் மாதம் இருபதாம் தேதி வரை கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான அளவில் மழை பதிவானது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குறிப்பிடும்படியாக மழை பெய்யாத நிலையில் கடும் வறட்சி நிலவியது. இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை முதல் இடைவிடாது கனமழை பெய்தது. வலங்கைமான் பகுதியில் ஒரே நாளில் 107 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது.
நடப்பு பருவத்தில் வலங்கைமான் பகுதியில் இதுவே அதிக மழையாகும். இந்த கன மழையின் காரணமாக தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் கதிர் முற்றுவதற்கு முன்பாகவே சம்பா பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.