தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்
தரங்கம்பாடி அருகே முனிவளங்குடியில் கூலி தொழிலாளியின் மகன் 36 வயதில்
நீதிபதி, தான் நீதிபதி ஆகும்போது பெற்றோர் இல்லையே என உருக்கம்.ஏழ்மை நிலையில்
இருந்தாலும் தன்னம்பிக்கை விடாமுயற்சி இருந்தால் யாரும் சாதிக்கலாம் எனவும் கருத்து.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே முனிவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர்
சுப்பிரமணியன்- அஞ்சம்மாள் தம்பதி. இருவரும் கூலி வேலை செய்து வந்தனர் இவர்களது மகன் பாலதண்டாயுதம் தங்களது ஏழ்மை நிலையை உணர்ந்து சிறு வயது முதலே கூலி வேலைக்கு சென்று தனது பள்ளி படிப்பை முடித்தார்.
வழக்கறிஞர் ஆக வேண்டும்
என விரும்பிய நிலையில் அதன் பின்னர் ஏழ்மை நிலை காரணமாக மேல் படிப்பு படிக்க
வசதியின்றி ஏழு ஆண்டுகள் பல்வேறு கூலி வேலைக்கு சென்று உள்ளார்.
இருப்பினும் தான் வழக்கறிஞராக வேண்டும் என விடா முயற்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில்
வழக்கறிஞர் எழுதராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பின்னர் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து பின்னர்
திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அரசு சட்ட கல்லூரியில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக பதிவு செய்து மயிலாடுதுறை
மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்நிலையில் அவரது பெற்றோர் இறந்துவிட தனக்கு திருமணமாகி தனது ஊரிலேயே வசித்து
வந்தவர் வழக்கறிஞராக இருக்கும் போதே நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில்
கடும் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று தனது 36 வயதில் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். மேலும் 2015 க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர்
தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதத்திற்கு மயிலாடுதுறை வழக்கறிஞர் அலுவலகத்தில் மாலை அணிவித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மேலும் தனது குடும்பத்தினரும் வீட்டில் கேக் வெட்டி உற்சாக
கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஏழ்மை நிலையிலும் விடா முயற்சியிலும்
நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள பாலதண்டாயுதத்திற்கு வீடு தேடி சென்று பலர்சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாலதண்டாயுதம் ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர் தற்பொழுது தான் நீதிபதியாக தேர்வாகியுள்ள நிலையில் அதனை காண தன்னுடன் இல்லையே என கண்கலங்கினார்.
ஏழ்மைநிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் யாரும்
சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.