திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இத்தலம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இவ்வாண்டு கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி பூச்சொறிதல் விழா உடன் தொடங்கியது. பத்தாம் தேதி முதல் காப்பு கட்டுதளும், 17 ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதலுடன், தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சிகள், இரவு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று, கடந்த 24 ஆம் தேதி புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா, 31 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெற்றது. இவ் விழாக்களில் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால் காவடி, பாடைக்காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி உள்ளிட்டவைகள் எடுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். மிகுந்த நோய் வாய்ப்பட்டு குணம் அடைந்தவர்கள்,
இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்வதை போன்று, பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக் காவடி திருவிழா வலங்கைமான் மகாமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாடைக் காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்காலிக கடைகள் பல அமைக்கப்பட்டது. இதனால் சுமார் 10 டன் அளவிற்கு குப்பைகள் சேர்ந்தது. அதனை பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அவ்வப்போது குப்பைகளை அப்புறப்படுத்தியது.
இந்நிலையில், பாடைக் காவடி எடுத்த பக்தர்கள் குடமுருட்டி ஆற்றில் பாடைக்காவடியை விட்டு சென்ற நிலையில் அதிலிருந்த வாழை மரங்கள், வண்ண காகிதங்கள் மற்றும் தென்னை ஓலைகள் உள்ளிட்டவை மலை போல் குவிந்து காணப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் அவற்றை முழுமையாக அப்புறப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் பக்தர்கள் தூய்மை பணியாளர்களை பெரிதும் பாராட்டினர்கள்.