சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தென்காசியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சாந்தி செல்வராணி, கிரேஸ் விஜயராணி, முத்துமாரி (மகளிரணி செயலர்) முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் தங்கத்துரை அனைவரையும் வரவேற்றார். சங்க செயல்பாடுகள் குறித்து மாநில செயலாளர் பிச்சைக்கனி பேசினார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் வரவு-செலவு அறிக்கையும், வழக்கு நிதி வரவு செலவினை வீரப்பிரகாசும் வாசித்தனர்.
இந்த கூட்டத்தில் தலைமையிடத்து செயலாளர் முனீஸ்வரன் சட்டச் செயலாளர் சக்தி முருகன், செய்தி தொடர்பாளர் ராஜ்சுதாஸ், துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், பழனியப்பன்,ஸ்ரீதர் இணைச் செயலாளர் பிரேம்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சையது இப்ராஹீம்,வெள்ளத்துரை, கிறிஸ்டோபர்,முகமது அசன் அலி, மாரியப்பன், முத்துக்குமார், முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது கூட்டத்தில், கல்வி உரிமைச் சட்டத்தின் படி சுயநிதி பள்ளிகளில் மாணவர்களை, அரசே செலவு செய்து சேர்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை சேர்க்க அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு வாங்கும் ஆய்வகப் பொருட்கள், நூல்கள் தரமானதாக இருக்க அரசு முன்னெடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியை தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் மட்டுமே இனி வரும் வருடங்களில் வழங்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள் பணியமர்த்துவதுடன், போதுமான கழிப்பறைகளை உருவாக்க வேண்டும்.சங்கரன்கோயிலை தலைமை இடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். சங்கம் சார்பில் ஜூன் முதல் வாரம் பணி நிறைவு பாராட்டு விழா நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணை செயலாளர் ஜானி அனைவருக்கும் நன்றி கூறினார்.