பள்ளிகளில் திருக்குறளுக்கு என தனிப் பாடவேளை ஒதுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறளை கூறி, பரிசுகளை பெற்றனர்.
இந்த நிகழ்விற்கு இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமை தாங்கினார்.
தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன், பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் பங்கேற்று, திருக்குறளின் பெருமையை உணர்ந்து அனைவரும் அதன் வழி நடத்தல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் திருக்குறளுக்கு தனி பாடவேளை பள்ளிகளில் ஒதுக்கவும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் முதுகலை ஆசிரியை பூவிழி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.