முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா நினைவு சின்னம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் நுழைவாயில் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும். பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரை அமைப்பாக பாலம் அமைக்கப்படும். சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது. இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர். இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர். அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது. அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் கூடி ஆலோசித்தனர். பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக அந்த குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு:- * மெரினா கடலோரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். * பேனா நினைவு சின்னம் கட்டப்படும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். * பேனா நினைவு சின்னம் கட்டுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. * எதிர்காலத்தில் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவு விதித்தால் அவற்றை கடைபிடிக்க வேண்டும். * பேனா நினைவு சின்னத்தை பார்ப்பதற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். * சென்னை கடலோர பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. * பேனா நினைவு சின்னத்திற்கு சரியான சாலை வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். * போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்தப்பட வேண்டும். * விதிமுறைகள் மீறப்பட்டால் திட்ட அனுமதி திரும்ப பெறப்படும். உள்ளிட்ட 15 நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரைபடத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *