அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்றைக்கு முடங்கி கிடக்கிறது. முதியோர் உதவி தொகை கூட பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள். தி.மு.க.பொறுப்பேற்ற பிறகு நம்முடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு பணிகளை கூட செயல்படுத்தப்படவில்லை.