நெல்லை மாவட்டம் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
கடந்த 29-ந்தேதி மாலை சுவாமி, அம்பாள் அன்ன வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் 63 நாயன்மார்கள் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற்றது. இதை பெண்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட திரளானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு பஜார் வழியாக மேலரதவீதி சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக்கரை தீர்த்த கட்டத்தில் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
மேலும் வருகிற 4-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.