அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஓடும் நதிகளில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. மாநிலத்தில் 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கி உள்ளனர். இன்னும் பலர், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் காலி இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, 10782.80 ஹெக்டேர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் விநியோகத்திலும் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் அவதிப்படும் அம்மாநில மக்களுக்கு இந்த நிலை உயர்வு கூடுதல் சுமையை தந்துள்ளது. இந்தநிலையில், அசாமில் வெள்ளபாதிப்பு தொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் உள் துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள மக்களை மீட்பது, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ போதுமான மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *