வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேர் திருவிழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 12–ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவு அம்மன் வீதிவுலா நடைபெற்று வந்தது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா காலை 8.15 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் கலந்து கொண்டு, அலங்கரித்திருந்த தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து 22–ஆம் தேதி தெப்பல் உற்சவமும், 23–ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் உயதாரர்கள் செய்திருந்தனர்.