நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர (மாரத்தான்) ஓட்டப் போட்டி 2023 நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி -கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும், தமிழ்நாடு அரசின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டிகள் (மாரத்தான்) நடத்தப்படுகின்றன.
அதன்படி, அறிஞர் அண்ணா நெடுந்தூர (மாரத்தான்) ஓட்டப் போட்டி 2023னை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. பி . சின்ராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா உள்ளிட்டோர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருச்செங்கோடு சாலையில் (07.10.2023) இன்று காலை தொடங்கி வைத்தனர்.
17 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் ஆகிய தூர அளவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த மாரத்தான் நெடுந்தூர ஓட்ட போட்டி திருச்செங்கோடு சாலையில் அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தூரத்திற்கு, நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் எர்ணாபுரம் மற்றும் தனியார் கல்லூரி வரை நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், ஒன்று முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் முறையே ரூபாய் ஐந்தாயிரம், மூன்றாயிரம், இரண்டாயிரம், மற்றும் நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூபாய் 1000 பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. பி. சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா ஆகியோர் வழங்கி, பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் து. கலாநிதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ். கோகிலா, உடற்கல்வி பயிற்றுநர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர் .