இனி கவிஞர் இரா .இரவி
சாதி மத மோதலை இனி ஒழித்திடுவோம்
சகோதர உணர்வுடன் அனைவரும் சங்கமிப்போம்
மூடநம்பிக்கைகளுக்கு முடிவுரை எழுதிடுவோம்
பகுத்தறிவு சிந்தனைக்கு வழி வகுத்திடுவோம்
வன்முறைக்கு நிரந்தர விடுமுறை தந்திடுவோம்
நன்மறை நம் திருக்குறள் வழி எந்நாளும் நடந்திடுவோம்
சோம்பேறித்தனத்திற்கு விடை கொடுத்திடுவோம்
சுறுசுறுப்பை எப்போதும் துணைக் கொள்வோம்
ஒய்வுக்கு ஒய்வு தந்து நாளும் உழைத்திடுவோம்
ஒப்பற்ற வெற்றிகளைத் தொடர்ந்துப் பெற்றிடுவோம்
மனிதநேயத்தை மறக்காமல் நினைவில் வைப்போம்
மனிதனை மனிதனாக என்றும் மதித்து நடப்போம்
வறுமை ஏழ்மை இல்லாது ஒழித்திடுவோம்
வளமை செழுமை நிலைத்திட பாடுபடுவோம்
தூக்குத் தண்டனை எனும் அரக்கனைத் தூக்கிலிடுவோம்
துயர நிகழ்வுகள் இனி இல்லாது செய்திடுவோம்
பெண்களுக்கு சம உரிமை உண்மையில் தந்திடுவோம்
பெண்களை அடிமைப்படுத்தும் மடமைகளை அகற்றிடுவோம்
உலக மகா ரவுடி என்றாலும் பாடம் புகட்டுவோம்
ஒற்றுமையுடன் அனைவரும் குரல் கொடுத்திடுவோம்
அநீதி உலகில் எங்கும் நடக்காமல் தடுத்திடுவோம்
நீதியை நிலை நாட்டிட நாளும் உழைத்திடுவோம்!