காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. காஞ்சி கிருஷ்ணா கல்வி நிறுவன அறக்கட்டளையின் நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். கல்லூரியின் தாளாளர் அ.அரங்கநாதன், தலைவர் வி.ஜெயக்குமார், பொருளாளர் மல்லிகா ராகவன். இயக்குனர்படுநெல்லி தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் கு.வெங்கடேசன் வரவேற்று பேசினார். சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இளங்கோவன் வெள்ளைச்சாமி பல்கலைக்கழக அளவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்ற வி.ரெனிடாமினி, கே.கோபிகா, கே.லாவண்யா ஆகியோருக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இளங்கலை மாணவர்களில் 488 பேருக்கும்,முதுகலை பயின்ற மாணவர்களில் 72 பேர் உட்பட 550 பேருக்கு பட்டங்களையும் வழங்கினார்.
இதன் பின்னர் தேர்வுக். கட்டுப்பாட்டாளர் இளங்கோவன் வெள்ளைச்சாமி பேசுகையில் கல்வி ஒன்று தான் இச்சமூகத்தை சீர்திருத்தும் கூர்மையான ஆயுதம். ஒவ்வொருவரும் சிறந்த வழிகாட்டியை தேர்வு செய்து மேல்படிப்பினை தொடர வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியபடி நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவுகளை காண வேண்டும் என்றும் பேசினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் கே.வீரராகவன் பட்டமளிப்பு விழா உறுதிமொழியை வாசிக்க அதனை பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் தொடர்ந்து வாசித்தனர்.
நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் ம.பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.