ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அகற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு
கோவில்பட்டியில் ஊர்வலமாக சென்று அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்த சாலையோர வியாபாரிகள்.
கோவில்பட்டி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் நாளுக்கு நாள் சாலை ஆக்கிரமிப்பு என்பது அதிகமாகி வருவதால் மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே கோவில்பட்டி நகராட்சி பகுதியில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. மேலும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு இருக்க கூடிய தற்காலிக ஆக்கிரமிப்புகளை மே 9 ந்தேதி அகற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அகற்ற முயற்சி செய்வதாகவும், தமிழக அரசின் அனுமதியுடன் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை அகற்றக்கூடாது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவில்பட்டி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம்,, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினார்.