பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் மக்களே
மதுரை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் சேக்மஸ்தான் மற்றும் நூருல்லாக் பறவைகளுக்கு சிரட்டையில் தண்ணீர் வைத்து வருகிறார்கள். மேலும் இதனை மஞ்சப்பையில் விழிப்புணர்வு வாசகமாக பதிவிட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு வெயிலின் சுட்டெரிப்பு அதிகமாகி உள்ளது. மனிதர்களாலே இந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை, சின்னஞ்சிறு பறவைகள் எப்படி வெயிலின் தாக்கத்தை தாங்கும்?
உணவில்லாமல் கூட சில நாள் வாழலாம். ஆனால் நீர் இல்லாமல் வாழவே முடியாது. நம்மை எவ்வாறு காத்துக் கொள்கிறோமோ, அதைப்போல பறவைகளையும் காக்க வேண்டும். அவைகளின் தாகத்தை தீர்ப்பதற்கு சிரட்டையில் தண்ணீர் வைத்தால், நீர் சற்று சூடாகாமல் இருக்கும்.
சமூக ஆர்வலர் நூருல்லா கூறிய போது…
பறவைகள் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. இயற்கையை பாதுகாக்க பறவைகளின் துணை கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. ஆகவே நாம் நமது வீடுகளில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்கலாம். மரம், செடிகளில் வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் சிரட்டை அல்லது நெகிழி குடுவைகளில் தண்ணீர் வைக்கலாம். இந்த முயற்சியை நாங்கள் செய்து வருகின்றோம். இதைப் போல தாங்களும் செய்யலாம்.