தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக அணிக்கான அணித்தேர்வு கடந்த 27ஆம் தேதி தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா என்பவரின் மகள் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ராகவி(16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இம்மானவி நாகர்கோவிலில் உள்ள ஒரு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சியாளர் அருணாவிடம் பயிற்சி பெற்று வருகிறார். அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து விவசாயி மகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதை அப்பகுதி பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.