தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட 127பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4 ஆவது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு (சிஐடியூ) சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட தலைவர் குன்னுமலையான், திட்ட தலைவர் கென்னடி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 127 பேரை மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அனல்மின் நிலையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச மின் உற்பத்தியாக 2 யூனிட்டுகளில் மொத்தம் 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று கூடன்குளம் பகுதியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களை உள்ளே விட மறுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனத்தை மறித்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.