தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. அரசின் அலட்சிய போக்கு காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த 2 கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன. கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதன்படி பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரண விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.