புதுச்சேரியில் முதல்முறையாக திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. மே 3-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் நாள்தோறும் 8 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாகம், மதியம் 12 முதல் ஒரு மணி வரை தீர்த்தவாரி, 6 முதல் 7 மணி வரை கங்கா ஆரத்தி, இரவு 7 முதல் 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்களை விட வெளியூர் பக்தர்களே அதிக அளவில் வந்து நீராடி சென்றனர். தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் திருக்காஞ்சி திணறியது. அரசு விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து புனித நீராடினர். ராசி, நட்சத்திரம் தெரியாத அனைவரும் நீராடலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷே கமும், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு கங்காஆரத்தி நடந்தது. நேற்றைய தினம் நடந்த கங்கா ஆரத்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.
அவருடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் , ரமேஷ் எம்.எல்.ஏ, மற்றும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளையுடன் புஷ்கரணி விழா நிறைவு பெறுகிறது.