பவானியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ., கருப்பண்ணன் திறந்து வைத்தார்.
பவானி நகராட்சி 7வது வார்டு, திருவள்ளுவர் நகரில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையமும், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டி முடிக்கப்பட்டது.
மேலும், பண்டார அப்பிச்சி கோவில் எதிரில் சிறுவர் பூங்கா தனியார் வழங்கிய நிதியின் மூலம் கட்டப்பட்டது. இந்நிலையில், இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பவானி அதிமுக எம்எல்ஏ கருப்பணன் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சிந்தூரி, அதிமுக நகர செயலாளர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் சாரதா சுரேஷ்குமார், நகர எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் மாதையன், அதிமுக பிரமுகர் பவானி ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.