கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சீர்பாதநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் கணேசன் வயது 73. இந்த கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் கணேசன் தனது பெயரில் வீடு, இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் மற்றும் தான் சம்பாதித்த நகை பணம் ஆகியவற்றை வைத்திருந்துள்ளார். தற்போது கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கணேசனை அவரது தம்பியின் மகன் துரைசாமி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவுவதுபோல் அழைத்துச் சென்று மணலூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணேசனின் பெயரிலிருந்த நிலத்தை துரைசாமி அவரது மனைவி சுமதி என்பவரது பெயருக்கு கிரைய ஆவணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இப்படி எழுதப்பட்ட கிரையத்திற்காக கணேசன் தொகை ஏதும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கணேசனிடமிருந்த நகை பணம் ஆகியவற்றையும் தம்பி மகன் துரைசாமி என்பவர் வாங்கிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. கணேசனிடமிருந்த வீடு நிலம் நகை பணம் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட துரைசாமி தற்போது உடல் நலம் குன்றி கிடக்கின்ற கணேசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது உனக்கே வழியில்லாமல் உடல்நலம் குன்றிய அவதிப்பட்டு வரும் கணேசன் தன்னை தனது தம்பி மகன் ஏமாற்றி விட்டார் என்றும், எனவே தன்னிடம் தனது தம்பி மகன் ஏமாற்றி எழுதப்பட்ட அந்த கிரையை ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உறவினர்கள் சிலருடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.