மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5,000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான சாலையாகும்.
மதுரை வைகை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை அமைந்துள்ள பனகல் சாலை அரசு மருத்துவமனை ஒருவழிப்பாதையாக அமல் படுத்த போக்குவரத்து காவல் துறையால் திட்டமிடப்பட்டு கீழ்கண்ட மாற்றங்களுடன் அமல்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்களின் விபரங்கள்:
1) கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து ஆவின் சந்திப்பு செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை.
2) அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளுவர் சிலை வழியாக கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3) தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.
4) சிம்மக்கல் வழியாக பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் வைகை வடகரை சாலை வழியாக புதியதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம். முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்வதன் மூலம் ஏ.வி. மேம்பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
5) அரசு மருத்துவமனைக்கு செல்லும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.
6) சிவசண்முகம் பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளையத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
7 )சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் வைகை வடகரை, சிவசண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக மருத்துவ மனைக்கு செல்லலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துடன் சோதனை போக்குவரத்து ஓட்டம் இன்று ஞாயிறு முதல் தொடங்க இருக்கிறது. மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.