பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பதட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையத்தில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோடை காலத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்தில் பயணம் செய்வதற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை போக்குவதற்காக தண்ணீர் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தண்ணீர் பந்தல் அங்கு வரும் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளுடன், பாபநாசம் எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுப்பதாக கூறி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தண்ணீர் பந்தல் இருந்த இடத்திலிருந்து அதை அப்புறப்படுத்தி ஓரங்கட்டியதாகவும், அவரது செயலை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதிக்கு வருகை புரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரை சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மனோகரன், காவல் ஆய்வாளர் (பொருப்பு) அனிதாகிரேசி மற்றும் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தப் பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.