முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா. அவரது மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24-ஆம் நாளன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கொடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ண பகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்டது. இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகி விட்ட போதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது. விசாரண மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்று வரை அவிழ்க்கப்பட வில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. தி.மு.க.வின் மீது கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்குக்கும், தமிழக காவல் துறையின் மாண்புக்கும் சவால் விடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆளும் தி.மு.க. அரசு கூடுதல் கவனமும், அதி முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்டு 1-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் பதில் அளித்து கூறியதாவது:- கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. நான் துணை முதலமைச்சர் ஆக இருந்த போது எந்த ஒரு அதிகாரமும் என்னிடம். இல்லை. நான் வகித்த துறையில் மட்டுமே அமைச்சராக அதிகாரம் இருந்தது. கொடநாடு கொலை வழக்கில் விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இரட்டை இலை வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கை தொடரும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தற்போதைய முதலமைச்சர் கொடநாடு வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்துவோம் என்று சொன்னார்கள். அவர் ஆட்சி வந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது/ ஆனால் அதில் ஒரு சிறிய அளவு கூட முன்னேற்றம் இல்லை என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. பாஜக தலைவர்கள் கூட்டணிக்காக எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை. அதிமுக விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாதது என்று நீதிமன்றம் அறிவித்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். கவர்னர் மீது குற்றச்சாட்டை வைத்து ஒரு நீண்ட கடிதத்தை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவர் யார் என்பதில் ஜனாதிபதி அண்ணாமலைக்கும் இடையே போட்டி. அதை பாஜக மேலிடம் தான் முடிவு பண்ண வேண்டும். நாங்கள் கட்சி நடத்துகிறோம் தேர்தலில் போட்டியிட உள்ளோம் உயர்நீதிமன்றம் கொடுக்கும் சின்னத்தின் அடிப்படையில் போட்டியிட உள்ளோம். டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *