செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள பவானி நகர் ஊர்ப்புற நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டியும், ஏப்ரல் 23 உலக புத்தகத் தினத்தை முன்னிட்டும் பவானி நகர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குழ்ந்தைகளுடன் உரையாடும் நிகழ்விற்கு பவானி நகர் வாசகர் வட்டத் தலைவர் எம்.முகம்மது அபுபக்கர் தலைமை தாங்கி உரையாடும் போது,
தேர்தலில் தங்கள் பெற்றோர்கள், சகோதர – சகோதரிகள் வாக்களிக்க உற்சாகப்படுத்துவதோடு, வாக்களித்து விட்டார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டுமென்றும்,
பள்ளி விடுமுறைக் காலத்தில் நூலகத்திற்கு வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும்,
விடுமுறைக் காலத்தில் அதிகமாக நூலகத்திற்கு வருகை தரும் முதல் ஐந்து நபருக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்றார்.
நூலகரும் வாசகர் வட்டச் செயலாளருமான ரமணி உரையாற்றுகையில், தினந்தோறும் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படிக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதவர்கள் உறுப்பினராக இணைத்து கொள்ள வேண்டும்.
அதைப் போல் தங்கள் வீட்டு உறுப்பினர்களையும் நூலகத்தின் பயன்பாட்டை தெரிவித்து அவர்களையும் நூலகத்திற்கு அழைத்து வர வேண்டுமென்றார்.
வாசகர் வட்ட உறுப்பினர்கள் மாரியப்பன், எஸ். ரமேஷ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.