வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சலில் அம்மன் அருள்பாலித்தார்.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில். இங்கு சித்திரை திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் கரகம் ஜோடித்தல், பூக்குழி இறங்குதல், அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் ஊஞ்சலில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இந்த ஊஞ்சல் உற்சவ விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரை திருவிழாவின் இறுதி நாளான நாளை அம்மன் கோட்டை குளத்தில் தெப்ப தேரில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.