பெரம்பலூரில் நடைபெறவுள்ள உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தகவல்
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக்கனவு என்ற நிகழ்வு நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில் இன்று (06.05.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது:
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக கல்லூரிக் கனவு என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதை முன்னிட்டு, அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவிகளுகு உயர்கல்விக்காக என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் கல்லூரிக்கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு 09.05.2024 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்வியில் என்னென்ன படிக்கலாம், கலை அறிவியலில் என்ன படிப்புகள் உள்ளது, பொறியியலில் என்ன படிப்புகள் உள்ளது, அறிவியல் தொழில்நுட்பங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பன போன்ற விரிவாக தகவல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளார்கள்.
பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த காட்சி அரங்குகள் அமைக்க உள்ளார்கள். கல்விக்கடனுதவி பெறுவதற்கான வங்கியாளர்களின் அரங்குகள், உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளது.
உயர்கல்வியில் சாதித்த மாணவ மாணவிகள், தமிழ்நாடு அரசுப்பணயாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுப்பணி பெற்றவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து கல்லூரிகளில் பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு விளக்க உள்ளார்கள்.
கல்லூரி கனவு குறித்து அரசால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை இந்நிகழ்விற்கு வருகை தரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்க உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துவருதல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்திட வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் ,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன் மற்றும் பெரம்பலூர் மாவட்த்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் சார்பாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.