தென்காசியில் அனுமதியின்றி தனியார் மதுபானக்கூடம் ஒரு மணி நேரத்தில் பூட்டு போட்ட காவல்துறை மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி
தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளியான ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள மனமகிழ் மன்றத்தில் நேற்று முன்தினம் புதியதாக தனியார் சொகுசு மதுபான பார் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் மதுபான பாருக்கு நேர் எதிரே அரசு தொழிற்பயிற்சி கூடம் அரசு அலுவலகங்கள் மற்றும் அந்த பகுதியில் தனியார் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி தனியார் மருத்துவமனை உள்ளநிலையில், அதில் பயிலும் மாணவ, மாணவிகளும் பொது மக்களும் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் அந்த மதுபான பாரை உடனடியாக மூட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய பகுதியில் இந்த மதுபான பாரை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இல்லையெனில்
மாணவர் சமுதாயம் மிகப்பெரிய சீரழிவுக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என அதிமுக பிரமுகர் டேனி அருள் சிங் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் தனியார் மருத்துவமனை உள்ள இடம் அருகே மதுபான விடுதி திறப்பதற்கு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அனுமதி கொடுத்தது எப்படி? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தென்காசி காவல்துறையினர் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான விடுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதை அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அந்த மதுபானவிடுதியை உடனடியாக மூட உத்தரவிட்டார்.
அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு தொழிற்பயிற்சி கூடம், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் உரிய அனுமதியின்றி திறக்கப்பட்ட தனியார் மதுபான விடுதியை உடனடியாக மூட உத்தரவிட்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை யினருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.