பலத்த சூறைக்காற்று காரணமாக 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
ரா.கார்த்திகேயன் மாவட்ட துணை நிருபர்-விருதுநகர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி வத்திராயிருப்பு குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் நத்தம்பட்டி, கட்டயத்தேவன்பட்டி, குன்னூர், கல்யாணிபுரம், துலுக்கப்பட்டி, காடனேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று காரணமாக விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த 200 ஏக்கர் வாழை மரங்கள் ஒடிந்தும் வேரோடு சாய்ந்தும் பலத்த சேதமடைந்துள்ளது.
இதனால் தங்களுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.