நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் மனு
தென்னை மரத்தில் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் பாதிப்பால் பாதித்த விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது,விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நீண்டகால பயிரான தென்னை பயிர் செய்து வருகின்றனர் சுமார் 10 ஆயிரம் விவசாய குடும்பங்கள் இதை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
தற்போது அடிக்கும் வெப்ப அலையால் வெள்ளை ஈ தாக்குதல், மற்றும் வாடல் நோய் போன்ற தாக்குதல்கள் அதிகரித்து தென்னை மரம் குலைகள் முதல் குருத்து வரை பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரம் கருகி அழியும் நிலையிலுள்ளது.
இதனால் அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து நிற்கும் நிலையில் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் வேளாண்மை துறையும் பாதித்த பகுதியில் ஆய்வு செய்து ஒரு மரத்திற்கு ரூபாய் 15,000 நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் மேலும் எஞ்சியுள்ள மரங்களை பாதுகாக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்து போர்க்கால நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் அந்த மனுவில் கோரி உள்ளனர்.