பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா நட்சத்திரத்தினை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானுக்கு யாக வேள்விகளுடன் திருக்கல்யாணம் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ளது திருஞானசம்பந்தர் மடம். இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா நட்சத்திர நாள் அன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுவது வழக்கம். யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வேள்விகள் நடைபெறும் அதனை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கைலாய வாத்தியம் முழங்க சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான் திருமண கோலத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி திருவீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. . ஆருத்ரா தரிசனத்தில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்த கோடி பெருமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது