புதுச்சேரி மாநிலம்  கொம்பாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக எம்பெருமாளும் ( 69), நிர்வாக பொறுப்பாளராக பாப்பாஞ்சாவடியை சேர்ந்த முதுநிலை எழுத்தரான கதிரவனும் (49) உள்ளனர். இங்கு விவசாயிகள் பலர் நகைகளை அடகு வைத்து, பணம் பெற்றுள்ளனர். அடகு வைத்த நகைகளை அவர்கள் மீட்க வந்தபோது, பொறுப்பாளரான கதிரவன் அவற்றை காலங்கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்க தலைவருக்கு புகார்கள் வந்தன. எனவே கணக்குகளை தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு கதிரவன் சரிவர ஒத்துழைக்கவில்லை. மேலும் அவர் பணிக்கும் வரவில்லை. இதைத்தொடர்ந்து கூட்டுறவு துறையில் புகார் செய்யப்பட்டது. மேலும் தணிக்கையாளர்கள் இந்திரமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  அப்போது 201 பேருக்கு நகைக்கடன் கொடுக்கப்பட்ட நிலையில் 18 நகை பொட்டலங்கள் காலியாக இருப்பதும், அதில் இருந்த 588 கிராம் நகைகள் மாயமாகி இருப்பதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.33 லட்சமாகும். இந்த நகைகளை கதிரவன் அங்கிருந்து திருடி எடுத்து சென்று இருப்பதாக எம்பெருமாள் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மோசடி வழக்குப்பதிவு செய்து கதிரவனை வலைவீசி தேடிவருகிறார். தனியாரிடம் அடகு பொறுப்பாளரான கதிரவன் ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்ட கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை எடுத்து சென்று வெளியில் தனியாரிடம் அடகு வைத்து பணம் பெற்றதாகவும், நகையை அடகுவைத்தவர்கள் நகைகளை மீட்க வந்தபோது அவர்களிடம் பணத்தை பெற்று தனியாரிடம் அடகுவைத்த நகைகயை மீட்டு ஓரிரு நாட்கள் கழித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *