தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன. பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சயனைடு உள்ளதா? எனவும் சோதனை செய்தனர். தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *