நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம் அரசு கல்வியியல் கல்லூரி கலையரங்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (23.05.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பேசியதாவது:-
விழுதுகளை வேர்களாக்க என்ற தலைப்பின் கீழ், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தன்னார்வ இயக்கம் இணைந்து நடத்தக்கூடிய மாணக்கர்களுக்கான உயர்கல்வி மற்றும் அவர்களுடைய வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்காக குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியை ஒதுக்கி கொடுத்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரத்தில் நோக்கங்களும், வழித்தடங்களும் அதிகம் இல்லை.
இந்த தொழில்நுட்ப காலத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக அனைத்து தகவல்களும், புள்ளி விவரங்களும் உடனுக்குடன் கிடைக்கின்றன.
முன்பு ஒரு போட்டித் தேர்வில் தயார் செய்வதற்காக அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று அதற்கான புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். குறிப்புகள் எடுக்க வேண்டும். தற்போது உள்ள தொழில்நுட்ப காலத்தில் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வழிகாட்டு நிகழ்ச்சியினை அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் முழு கவனத்தை செலுத்தி முழு உழைப்பை கொடுத்து படிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் இந்த உலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இதில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான பாதைக்கு செல்லக் கூடாது.
கண்டிப்பாக உங்கள் அனைவராலும் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாகவும் திகழ வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசின் மூலம் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் களங்காணி ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் .சே.சுகந்தி, குமாரபாளையம் வட்டாட்சியர் தஅ.சண்முகவேலு, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சு.சரவணன், உயர்கல்வி வழிகாட்டு பயிற்றுநர் சுனில்குமார், போட்டித்தேர்வு பயிற்சியாளர் தகண்ணன், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் சு.சிவக்குமார் ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.