கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்த கிராமத்தில் இவரது குடும்பத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்த ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலம் சில மாதங்களுக்கு முன்பு தனியார் சோலார் நிறுவனம் (ஸ்பீடு பூமி ப்ரோமோட்டர்ஸ்) ஒன்றிக்கு பத்திர பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இது தங்களுடை சொந்தம் நிலம், அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இருக்கும் போது, எப்படி தனியார் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்ய முடியும், முறைகேடாக செய்யப்பட்டுள்ளதாக கொப்பம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் அந்த தனியார் நிறுவனத்தினர் இவர் விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருக்கும் போது, போலியான ஆவணங்களை கொண்டு முறைகேடாக, பணத்தினை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனத்திற்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும், போலியான ஆவணங்களை கொண்டு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரபதிவினை ரத்து செய்ய வலியுறுத்தியும், தன்னிடம் லஞ்சம் கொடுப்பதற்கு பணம் எதுவும் இல்லை கொடுப்பதற்கு தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கோழி மட்டும் தான் இருக்கிறது
என்று கூறி அவற்றை தலையில் வைத்து கொண்டு, மேளம் தாளம் முழங்க விவசாயி கோவிந்தராஜ், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் அருமைராஜ், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் சரவணன், சமூக ஆர்வலர்கள் ராஜேஸ்கண்ணன், சுதாகரன், ராஜா மார்த்தாண்டம், பரமசிவம், தங்கவேலு, மனோஜ் ஆகியோர் மேள தாளம் முழங்க ஊர்வலமாக சென்று கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் தலையில் சுமந்து வந்த பொருள்களுடன் உள்ளே சென்ற முயன்ற போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பொருள்கள் இல்லமால் சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே சென்று தங்களது கோரிக்கை மனுவினை சார்பதிவாளர் சுரேஷ் கண்ணனிடம் வழங்கினர். மனுவினை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் சுரேஷ்கண்ணன், இதற்கு முன்புள்ள சார்பதிவாளர்கள் பதிவு செய்துள்ள ஆவணங்களை கொண்டு தான் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்டபதிவாளரிடம் முறையீடும் படி அறிவுறுத்தினர். இந்த போராட்டத்தினால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.