தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் சங்க மாநில சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிவகங்கையில் நடைபெற்றது.
தமிழக அரசு புகைப்படக் கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வீடியோ & போட்டோகிராபர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு, தேர்தல் சிவகங்கையில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநில செயற்குழு, பொதுக்குழு, தேர்தலில் மாநில நிர்வாகத்திற்கு புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில நிர்வாகத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர் உள்ளிட்ட 16 பொறுப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 16 பொறுப்புகளில் 14 பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாத்தல் செய்திருந்ததால் போட்டி இல்லாமல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில துணைத்தலைவர், மண்டலம் ஐந்தின் மண்டலச் செயலாளர் இரண்டு பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.
இதில் 2023 – 2025 ஆம் ஆண்டுகளுக்கான புதிய மாநில தலைவராக மீண்டும் கிருஷ்ணகிரி சிவக்குமார், பொதுச்செயலாளராக திண்டுக்கல் ஸ்ரீதர், பொருளாளராக தர்மபுரி சுரேஷ், அமைப்பாளராக சென்னை சரவணன், துணைத்தலைவர்களாக வேலூர் அசோக், திருநெல்வேலி பொன்னுசாமி, இணைச் செயலாளராக கோவை மூர்த்தி, மதுரை ஸ்ரீராமகண்ணன், மண்டல செயலாளர்களாக சென்னை கௌஸ் பாஷா,திருவண்ணாமலை மயிலாபுரான்,
நாமக்கல் ஜெகன்நாதன்,திருப்பூர் சிவக்குமார், அரியலூர் அறிவழகன், சிவகங்கை பாண்டியன், மாயவரம் குமார்,
கன்னியாகுமரி ஐயப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புகைப்பட கலைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புகைப்படக் கலைஞரின் நீண்ட நாள் கோரிக்கையான புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் அறிக்கையில் புகைப்பட கலைஞர்களுக்கு தனிநலவாரியம் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததை வலியுறுத்தி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு தனிநலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி தொடர்ந்து நடத்துவது எனவும்,
புகைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு இலவச கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும்,
அதே போல புகைப்பட கலைஞர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மூலம் வழங்குவதை முழுதாக பயன்படுத்திக் கொள்வது எனவும்,
மரணம் அடைந்த புகைப்படக் கலைஞர் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வீடியோ & போட்டோகிராபர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை சிவகங்கை மாவட்ட தலைவர் பெஸ்ட் பாண்டி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.