விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் ஓடைப் பகுதிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைத் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் திடீரெனத் தண்ணீர் தேங்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் வட்டங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து தணிக்கை செய்திடவும், வெள்ள சேத பாதிப்புகளை உடனுக்குடன் ஆய்வு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது தொலைபேசி எண்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குறுந்தகவல்கள் (sms) அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு இடர்பாடுகள் ஏதும் இருப்பின் 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *