கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் நடைபெற்றது.
தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பங்குனி சித்திரை மாதத்தில் பல திருக்கோயில்கள் தேர் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருவதை கண்டுள்ளோம். இந்தியாவில் நடைபெறும் விழாக்களில் தமிழக திருக்கோயில்களில் நடைபெறும் தேர் திருவிழாக்கள் சிறப்பான இடத்தை பெற்று சிறந்து விளங்குகின்றன. அப்படி சிறப்புமிக்க தேர்த்திருவிழாவாக கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீரணிப்பட்டியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரை திருவிழா, கொடியேற்றம் செய்து, காப்பு கட்டி பத்து நாட்கள் தொடர்ச்சியாக விழா நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து சித்திரை மாதம்2ஆம் நாள் 15/04/ 2024 திங்கட்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவ்விழாவிற்காக இரண்டு நாட்களாக தேர் அலங்காரம் செய்யும் வேலைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று பூர்த்தி அடைந்த நிலையில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்து ஆலயத்தை வளம் வந்து தேருக்கு கொண்டு வரப்பட்டு சாஸ்திரப்படி தேரில் ஸ்தாபனம் செய்து மாலைகள் மற்றும் அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வான வேடிக்கைகள் முழங்க, மங்கள வாத்தியங்கள், இசைத்து 44 கிராம நாட்டார்கள் முன்னிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்களால் பெரும் கோசத்துடன், வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டு நான்கு வீதிகளில் மிக அழகாக சுற்றி வரப்பட்டு மீண்டும் தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
இவ்விழாவில் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் அலை போல் திரண்டு இருந்த நிலையில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் காவல்துறையினர் அவர்களின் கடமையில் சீரும், சிறப்புமாக, செவ்வனே பெரும் பங்காற்றி விழாவினை மிகச் சிறப்பாக பாதுகாப்பு கொடுத்தது கண்டு, பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்து காவல்துறையினரை பாராட்டினர்