தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அளவிலான அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது. மூன்று கட்ட பயிற்சியை முடித்தவர்கள், தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18 -ஆம் தேதி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையத்திற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மொத்தமாக ஐந்து நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக, தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கு 1700 ரூபாயும், ஒன்னு முதல் நாலு வரையிலான வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு 1300 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வழங்கும் ஊதியம் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலங்கைமான் வட்டாரத் தலைவர் கோ.பாலசுந்தரம் கூறுகையில்:- தேர்தல் பணியில் மொத்தமாக ஆறு நாட்கள் ஈடுபடுகிறோம். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 60 முதல் 80 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு பயிற்சிக்கு சென்று வருவதற்கு 300 ரூபாய் செலவாகிறது. மொத்தமாக ஒரு அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் பொழுது போக்குவரத்து, சாப்பாடு, பயணசெலவு என 3000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இன்றைய நிலையில் பெட்ரோல், டீசல், சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தாமல் குறைவான ஊதியத்தை வழங்கி வருகிறது. இது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் ஒருவர் தேர்தல் ஆணையத்தின் 1300 ரூபாயை பெற்றுக்கொண்டு, 3000 ரூபாய் செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கூறினார்.