கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் என்றார். சிங்காநல்லூர், காந்திபுரம், துடியலூர், மேட்டுப்பாளையம், வடவள்ளி போன்ற இடங்களில் ஓட்டுக்கு பணம் அளித்து வருவதாகவும் குறிப்பாக கவுண்டம்பாளையம்- இடையர்பாளையம் செல்லும் வழியில் தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடோனில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து அன்னதானம் கொடுப்பது போல் பணம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

இது பற்றி காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தால் அவர்கள் வருவதற்கு முன்பு கட்சியினர் அங்கிருந்து சென்று விடுவதாகவும் சரியென்று குற்றவாளிகளை நாங்களே பிடித்துக் கொடுத்தால், பிடித்துக் கொடுத்த கட்சிக்காரர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். காவல்துறையினரும் அதிகாரிகளும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்தார்.

அதிமுகவினரும் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இருந்த அதிகாரிகளை வைத்து பணப்பட்டுவாடா செய்து வருவதாக தெரிவித்தார். திமுகவினர் ஓட்டுக்கு 2000 ரூபாய் அதிமுகவினர் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்து வருவதாக தெரிவித்தார். கோவையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து வந்து பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் நாளை காலை அவர்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் பத்து மணிக்கு மேல் கோவைக்கு வந்துவிடுவார்கள் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எந்தெந்த வாக்காளர்கள் ஊரில் இல்லையோ அந்த வாக்காளர்களின் அடையாள அட்டையை எடுத்து வந்து விடுவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

இலை மறைவு காய் மறைவு என்று கொடுத்து வந்த நிலையில் இன்று அன்னதானம் செய்வது போன்று பணப் பட்டுவாடா நடந்ததாக தெரிவித்தார்.

பூலுவம்பட்டி பகுதியில் பாஜகவினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு அந்த பணத்தை ஓட்டுக்கு பணம் கொடுக்க தான் எடுத்துச் சென்றாரா என்று தெரியவில்லை அதற்கான ஆதாரம் இருந்தால் அவர் வாக்களிப்பதற்கு பணம் கொடுக்கின்ற குற்றவாளி அல்ல எனவும் லட்சக்கணக்கில் கொடுப்பதை எல்லாம் விட்டு விடுகிறார்கள் என்றார். யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் தவறு ஆனால் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் என்பதை கொடுக்கவும் மாட்டோம் அதனை வெறுக்கிறோம் எதிர்க்கிறோம் என தெரிவித்தார். மேலும் பிடிபட்ட பொழுது வாக்காளர்களின் பூத் சிலிப் இருந்தது என கேள்வி எழுப்பியதற்கு அது போன்று இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் நாங்கள் தவறே செய்ய மாட்டோம் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *