ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில் அடிப்பதால் கரும்பு பயிர்கள் கருகி நாசம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. வரலாறு காணாத அளவிற்கு வெயில் அடிப்பதால் கால்நடைகள் மிகவும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. கிடை மாடுகள் படும் பாடு சொல்லி மாளாது. ஆயிரக் கணக்கில் அவை மேய்ந்து வருவதால் உரிய தண்ணீர் இல்லாத நிலையில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலையில் ராஜபாளையம் மற்றும் தெற்கு வெங்காநல்லூர், நத்தம் பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு 500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டு உள்ளனர். இவை உரிய தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி போய் கருகி காணப்படுகிறது. கோ 12032 ரக கரும்பு வறட்சியைத் தாங்கி வளர்ந்தாலும், அடிக்கும் வெயிலுக்கு எதுவுமே தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் கணக்கில் கரும்பு சாகுபடி செய்து கரும்பு பயிர் கருகுவது கண்டு விவசாயிகள் மனம் நொந்து போய் காணப்படுகிறார்கள். பயிர்கள் வாடியது குறித்து வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கி உதவுமாறு கரும்பு விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.