பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்திய பான் குட்கா பறிமுதல்
கணவன், மனைவி கைது
அணைக்கட்டு,ஏப்.27;
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் காஞ்சிபுரத்திற்கு காரில் கடத்திய பான், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இன்று விடியற்காலையில் பான், குட்கா கடத்தப்படுவதாக எஸ்.பி. மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் டி.எஸ்.பி திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து காரில் சோதனை செய்தபோது.
8 பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா பொருட்களும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, சாளமங்களம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (37) மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி (34) என்பதும் தெரிய வந்தது.
மேலும் இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 17 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், 108 கிலோ எடையுள்ள பான் , குட்கா பொருட்கள் இதன் மதிப்பு சுமார் 1.10 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்தும் பள்ளிகொண்டா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.